நாட்டின் எல்லா பெரிய நகரங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. பெட்ரோல்-டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலை மாறுபடுகிறது.
எதிர்க்கட்சிகள், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசு வரி கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில்,
”100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டும் போது கொண்டாட மற்றொரு வாய்ப்பு இருக்கும்!” என பதிவிட்டுள்ளார்.
























