கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த நூருல் அமீன் என்பவர், ஆன்லைன் மூலம் ஆப்பிள் ‘ஐபோன் 12’ மாடல் வாங்க ஆர்டர் செய்திருந்தார். அவரின் அந்த ஆர்டரின் பேரில் டெலிவரியும் வந்தது. டெலிவரியை வாங்கிய நூருல் அமீன் ஐ ஃபோனை எதிர்பார்த்து ஆவலுடன் பிரித்துப் பார்த்தபோது பேரதிர்ச்சியடைந்தார். காரணம், அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக சோப்புக் கட்டி ஒன்றும் 5 ரூபாய் நாணயமும் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பார்சலில் வந்தது சோப்பு கட்டிதான் என்பதை, தான் எடுத்த வீடியோ மூலம் சைபர் க்ரைம் போலீசாரிடம் சென்று ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அந்த பாக்ஸின் மேல் இருந்த ஐஎம்இஐ எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் வலைதள நிறுவனத்திடம் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த குறிப்பிட்ட ஐஎம்இஐ எண் உள்ள மொபைல் போன் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டில் இருப்பதும் தெரியவந்தது.
அதன்பிறகு நூருல் அமீன் அந்த மொபைலுக்காகச் செலுத்திய தொகை முழுவதுமாக திருப்பியளிக்கப்பட்டது. ஏற்கனவே விற்கப்பட்ட மொபைல் போன் பெட்டிக்குள் சோப்பை வைத்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சைபர் க்ரைம் போலீசார் தெரிவித்தனர்.
























