நேற்று நடந்த மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு பதவி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, ம.தி.மு.க.வின் தலைமைக் கழகச் செயலாளராக தனது மகனான துரை வையாபுரியை நியமித்து நேற்று அறிவித்தார். மேலும், இது வாரிசு அரசியல் இல்லை என்றும் தொண்டா்கள், கட்சியினரின் விருப்பப்படியே அவா் தோ்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வைகோ, மரணம் வரை தன்னுடைய அரசியல் பணிக்கு ஓய்வு இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், துரை வைகோவுக்கு பதவி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். மேலும் அவர் ‘மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்’ என்ற இயக்கத்தை தொடங்க இருப்பதாகவும் இது வெறும் அரசியல் இயக்கம் மட்டுமல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் துரை வைகோவிற்கு பதவி அளித்தது குறித்து அவர் கூறுகையில், ‘கட்சியில் பலருக்கு திறமை இருந்தும் தன்னுடைய மகன் துரை வைகோவால் மட்டுமே கட்சியை நடத்த முடியும் என்று வைகோ கூறுவது வியப்பாக உள்ளது. அவர் கட்சியில் இப்போது யாரையும் அடையாளம் காட்ட வேண்டிய அவசியமில்லை’ என்றும் தெரிவித்தார்.
























