தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் பார்கள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் டாஸ்மாக் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடுவார் என தெரிவித்துள்ளார், அமைச்சர் செந்தில் பாலாஜி.
சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், திருச்சி, சேலம், மதுரை, சென்னை, கோயம்புத்தூர் மண்டலங்களை சேர்ந்த முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட பொது மேலாளர்களுடன் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றதாகவும், கடந்த மாதம் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கடைகள் மூட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த புகார் அடிப்படையில் 84 கடைகள் இடமாற்றம் செய்யக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். டாஸ்மாக் கடையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 134 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 1599 பார்கள் விதிகளை மீறி செயல்பட்டன அவற்றில் 933பார்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இனிவரும் காலங்களில் புகார்கள் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளதாக கூறிய அமைச்சர், கொரோனா நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் பார்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இலக்கு நிர்ணயித்து டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்படவில்லை என்றும் அது பற்றி நாங்கள் ஆய்வுக்கூட்டத்தில் கூட பேசுவதில்லை என்றும், இனிவரும் காலங்களில் இலக்கு நிர்ணயம் இருக்காது என்றும் தெரிவித்தார்.
மதுப்புட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகவிலைக்கு விற்பனை செய்யும் கடைகளின் மீது நடவடிக்கைகள் எடுக்க 38 மாவட்டங்களிலும் மாவட்ட மேலாளர்கள், பத்திரிக்கையாளர்களை உள்ளிடக்கிய வாட்ஸ் அப் குழுவினை ஆரம்பிக்க இருப்பதாகவும், அந்த குழுவில் அமைச்சரானத் தானும் இடம்பெற உள்ளதால் இனி உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
























