அண்மையில் சில தினங்களாக மலைப்பிரதேசமான உத்தரகாண்டில் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இடைவிடாமல் கொட்டிய கனமழையால் நைனிடால் மாவட்டத்தை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உத்தரகாண்டில் இதுவரை 34 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி தன் டிவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ‘உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அங்கே நிலமை இன்னும் மோசமாகவே உள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள். மீட்பு பணியில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
























