கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தொடர்ச்சியாக இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், மற்ற கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும். தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் நாளை மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனச் சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
























