சசிகலா இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுவதால், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த சசிகலா விரும்பினார். இதற்காக பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன. ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா வருவதை அறிந்த தொண்டர்கள் காலை முதலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியிலும், சசிகலாவின் திநகர் வீட்டின் முன்பு அ.தி.மு.க கொடிகளுடன் காத்திருந்தனர்.
அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் இருந்து சசிகலா இன்று காலை புறப்பட்டார். சாலையில் அதிமுக கொடிகளுடன் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலா மலர்களை வைத்து மரியாதை செய்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். எம். ஜி.ஆர், அண்ணா சமாதிகளுக்கும் சென்று மாலை அணிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஏன் தாமதமாக வந்தேன் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். இத்தனை ஆண்டுகள் மனதில் தேக்கி வைத்த பாரத்தை தற்போது ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன் அம்மா தொண்டருக்களுக்காகவே வாழ்ந்தவர்! தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்!
கழத்தை அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன். அம்மா உடன் நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதியாகும்.இந்த 5 ஆண்டு காலம் தேக்கி வைத்திருந்த பாரத்தை அம்மா நினைவிடத்தில் இறக்கி வைத்துவிட்டேன். தலைவரும், அம்மாவும் தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்.
ஜெயலலிதா நினைவிடத்தில், நடந்தவைகளையும், இனி ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதையும் சொல்லி விட்டு தான் வந்தேன். தொண்டர்களையும் கழகத்தையும் தலைவரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள்” என்றார்.
























