லகிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி. உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மேல் மோதிய காரில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார், ஆஷிஷ் மிஸ்ரா. அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பரபரப்பான சூழலில், லகிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி இன்று பங்கேற்றார். சீக்கியர்கள் நடத்திய பிரார்த்தனையின் போது பிரியங்கா காந்தி பங்கேற்று உயிரிழந்த விவசாயிகளுக்கு தன் அஞ்சலியைச் செலுத்தினார்.
























