கோவை அருகே குருடம்பாளையம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட்டவர் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றிருக்கிறார். அவரது குடும்பத்தில் மொத்தம் 6 பேர் உள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை.
கோவை அருகே குருடம்பாளையம் ஊராட்சியில் 9-வது வார்டு இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார் கார்த்திக். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் கார்த்திக் வெறும் ஒரு மட்டுமே பெற்றுள்ளார். திமுக சார்பில் அருள்ராஜ், அதிமுக சார்பில் வைத்தியலிங்கம், பாஜக சார்பில் கார்த்திக், தேமுதிக சார்பில் ரவிக்குமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அந்த வார்டில் மொத்தம் 1,551 வாக்குகள் உள்ள நிலையில், 913 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே திமுகவைச் சேர்ந்த அருள்ராஜ் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் அருள்ராஜ் 387 வாக்குகள் பெற, அவருக்கு அடுத்ததாக சுயேச்சை வேட்பாளர் ஜெயராஜ் 240 வாக்குகளை பெற்றார். அதிமுக வேட்பாளர் வைத்தியலிங்கம் 196 வாக்குகளை பெற்றார். 3 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவைச் சேர்ந்த அருள்ராஜ் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 1 வாக்கையும், தேமுதிகவில் போட்டியிட்ட ரவிக்குமார் 2 வாக்குகளையும் பெற்றுள்ளனர். கார்த்திக் பாஜக இளைஞரணி மாவட்ட துணை தலைவராக உள்ளார். கார்த்திக் உள்பட அவர் குடும்பத்தில் 6 பேர் உள்ள நிலையில் அவர் குடும்பத்தினர் கூட அவருக்கு வாக்களிக்காதது பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
























