தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை உடைத்து கனிமவளங்களை சட்ட விரோதமாக கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட யூ டியூபர் சாட்டை துரைமுருகன், தமிழக முதலமைச்சர் குறித்து விமர்சித்துப் பேசினார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர். சாட்டை துரைமுருகன் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25 – ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதனை தொடர்ந்து நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட சாட்டை துரைமுருகன் மீது 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி துரைமுருகன் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்திலிருந்து கேரளாவுக்குக் கனிமவளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டுசெல்வதைக் கண்டித்து, நேற்று (10-10-2021) கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்த் தேசிய ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகனைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் போக்கோடு பொய்யாகக் குற்றஞ்சாட்டி, வழக்குப் புனைந்து சிறைப்படுத்தியிருக்கும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான இத்தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது.
‘சாட்டை’ துரைமுருகனை தற்போதையச் சூழலில் கட்சியை விட்டு நீக்கி, அவரைக் கைவிட்டதுபோல கட்சியின் கடிதத்தாளைப் போலியாக உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியலாகும். இத்தருணத்தில், அவர் இவ்வழக்குகளிலிருந்து மீண்டுவரவும், சிறையிலிருந்து வெளிவரவும் நாம் தமிழர் கட்சி அவரோடு முழுமையாகத் துணைநிற்கும் எனத் தெரியப்படுத்துகிறோம்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























