தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், ‘திமுக உடன் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி செய்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தேமுதிக கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை விஜய பிரபாகரன் சந்தித்தார்.
செய்தியாளர் ஒருவர் கேள்விக்கு, ’தேமுதிக அதே எழுச்சியோடுதான் செயல்படுகிறது. வெற்றி தோல்வி என்பது வந்து போகும். மீண்டும் தேமுதிகவை தூக்கி நிறுத்துவோம். மக்கள் எங்களை தேர்தல் நேரத்தில் அங்கீகரிக்காததால் தேர்தலில் தோல்வியுற்றோம். மற்றபடி எங்களின் வாக்கு சதவீதம் அப்படியேதான் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் அவர், ‘தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.வருங்காலத்தில் தேமுதிக ஆரம்பித்ததன் லட்சியம் நோக்கி பயணிப்போம் என்று குறிப்பிட்டார். திமுகவின் கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சி செய்கிறார் என விஜய பிரபாகரன் பாராட்டி பேசினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நலமாக உள்ளது என்றும் பழைய நிலைக்கு திரும்ப இன்னும் கொஞ்ச நாள் ஆகும். தங்களால் முடிந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்றும் கூறிய அவர், உரிய நேரத்தில் விஜய்காந்த் தவறாமல் மக்களைச் சந்திப்பார் எனவும் தெரிவித்தார்.
























