உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ராகுல் காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் சென்றுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பஞ்சாப் முதல்வர் முதல்வர் சரண்ஜீத் சிங் “கொலை செய்யப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு துணையாக நிற்போம். பஞ்சாப் அரசு சார்பில் இச்சம்பவத்தில் பலியான விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மாநில அரசு சார்பில் ரூ.50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்தார். அதனையடுத்து பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷும் சத்தீஷ்கர் அரசு சார்பில் ரூ. 50 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகை தருவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் அவ்வாகனங்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் பலரது கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது.
























