நவம்பர் மாத இறுதிக்குள் வடபழனி முருகன் கோயிலுக்கு குடமுழக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கோபுர தரிசனம் காண்பதற்கு ஏதுவாக கோயிலுக்கு முன்பு உள்ள கூரைகள் அகற்றும் பணி இன்று தொடங்கியுள்ளது. வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயில் நுழைவு வாயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரூ.8 லட்சம் செலவில் தற்காலிகமாக பூஜை பொருட்கள் மற்றும் மலர் மாலைகள் விற்பனை செய்வதற்கான அங்காடிகளுக்கு மாற்று இடம் வழங்கி கடைகளை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து, வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து குடமுழக்கு பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் ஓதுவாரால் அருணகிரிநாதரின் திருப்புகழ் ஓதப்பட்டு பூஜை நடைபெற்றது. மேலும் அவர், வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு வடபழனி முருகன் கோயில் குடமுழக்கு பனிகள் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்றும், வடபழனி முருகன் கோயிலில் நவம்பர் மாதத்துக்குள் குடமுழக்கு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதல் திருமண மண்டபங்கள், மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் வசதி ஏற்படுத்தி தருதல் போன்ற பணிகள் ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், ரூ 40 கோடி செலவில் வடபழனி கோயில் அர்ச்சகர்களுக்கு வீடுகள் கட்டும் பணி விரைவில் தொடங்கவிருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும், குடமுழக்கு பணிகள் நடைபெறும் கோயில்களில் சிதிலமடைந்த பகுதிகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், குடமுழக்கு பணிகள் நடைபெறாத கோவில்களிலும் சிதிலமடைந்த பகுதிகளை சீர்செய்ய அதிகரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அமாவாசை தினத்தில் மூத்தோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தனியாக இடம் விரைவில் அமைக்கப்படும் என்றும், திருப்பதிக்கு நிகராக திருச்செந்தூர் கோயில்களை பக்தர்களின் வசதிக்காக மேம்படுத்த வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வெகு விரைவில் பணிகள் தொடங்கப்படவுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பக்தர்கள் அதிகமாக வரும் 553 திருக்கோயில்களை கண்டறியப்பட்டு அதனை மேம்படுத்துவதற்கு வரைவு திட்டம் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், சட்டபேரவையில் அறிவித்த 300 திருக்கோயில்களின் பணிகளைஅடுத்த மானிய கோரிக்கைக்குள் தொடங்கி நிறைவேற்றப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
























