‘எம்பிரஸ்’ என்ற இந்தியாவின் முதல் உல்லாசக் கப்பல், மும்பையில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் சுற்றுலா பயணிகளுடன், 3 நாள் பயணத்தை தொடங்கியது. தடை செய்யப்பட்ட போதை பொருட்களை இக்கப்பலில் பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கார்டெலியா குருஸஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ’எம்பிரஸ்’ உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சிலர் நேற்றைய தினம் அந்தக் கப்பலில் ஏறினர்.
கப்பல் நடுக்கடலை நெருங்கிய நேரத்தில் பொதுவெளியிலேயே சிலர் தடை செய்யப்பட்ட கொகைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்தனர். போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் சினிமா, ஃபேஷன், பிஸினஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் ‘ஃபேஷன் டிவி இந்தியா’ இணைந்து ’கிரே ஆர்க்’ என்ற பெயரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை சொகுசுக் கப்பலில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் தான் போதைப் பொருள் பார்ட்டி நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சர்ச்சையில், பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் சிக்கியிருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கானிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆர்யன் கான் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை, அவர் கைதும் செய்யப்படவில்லை என போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் 8 பேரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவர்களுக்கு போதைப் பொருள் உட்கொண்டார்களா என கண்டறிய சோதனை நடைபெற்றிருக்கிறது. அவர்கள் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 7 மணி நேரம், கப்பலின் ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கப்பல் மீண்டும் மும்பை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு பிடிபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
























