நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தின் சண்டைக்காட்சிக்காக டெல்லி சென்ற படக்குழு அதனை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளது. அப்போது எடுத்த விஜய்யின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் முக்கியப்பாத்திரங்களில் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும், இம்மாத துவக்கத்தில் நான்காம் கட்டப் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சண்டைக் காட்சியை படமாக்குவதற்காக படக்குழுவினர் கடந்தவாரம் டெல்லிக்குச் சென்றனர். அங்கு 5 நாட்கள் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பு நிறைவு பெற்று படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் சென்னைக்குத் திரும்புவதற்காக செல்லும் நடிகர் விஜய்யின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. அப்புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
























