கிஷ்கிந்தா பொழுதுபோக்குப் பூங்கா அமைக்கப்பட்டுள்ள 177 ஏக்கர் நிலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் எனவும், இன்னும் ஒரு வாரத்தில் வல்லுநர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இந்து அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறையின் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கை என 120 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்த மானிய கோரிக்கை வருவதற்குள் தற்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 50 சதவிகித பணிகளை முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் மொட்டைக்கு இல்லை கட்டணம் உள்ளிட்ட 5 திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் லயோலா கல்லூரி அமைந்திருக்கும் இடம் எந்த திருக்கோவிலுக்கும் சொந்தமானது இல்லை என்று தெரிய வந்துள்ளது.
கிஷ்கிந்தா இடம் – ஜமீன்தார் ஒழிப்பு சட்டம் மூலம் உருவான நிலம். கிஷ்கிந்தா அமைந்துள்ள 177 ஏக்கர் நிலமும் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம்தான். இன்னும் ஒரு வாரத்தில் நிபுணர்களிடம் ஆலோசித்து சட்டப்போராட்டம் நடத்தி அது கோவில் நிலம் என்று உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஆண்டுக்குள் 500 கோவில்களுக்கு திருப்பணிகள் செய்யப்படும். பயன்பாட்டில் இல்லாத நகைகளை ஒன்றிய அரசின் அலுவலகத்தின் ஒப்புதலோடு தங்க பிஸ்கட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
























