நடிகர் சூர்யா அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. தற்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்துக்கு முன்னதாகவே, இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இயக்குனர் சிவா சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையடுத்து சிவா, சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
























