வாஷிங்டன்னில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை பிரதமர் மோடி இன்று சந்திக்க உள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு நவம்பருக்கு பின்னர் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 26, 27-ந்தேதிகளில் அண்டை நாடான வங்காளதேசத்துக்கு மட்டும் சென்று வந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள விமானப்படை தளத்திற்கு தனி விமானத்தில் சென்றடைந்த மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவும் வரவேற்றனர். விமானப்படை தளத்தில் திரண்டிருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் மோடி இன்று முதல் கட்டமாக சந்திக்கிறார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான ’குவாட்’ கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டு, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் ஆகியோரைச் சந்தித்து பேச உள்ளார். சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
























