தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம்நடிகர் சாய் தரம் தேஜ். நடிகர் சீரஞ்சீவியின் சகோதரி மகனான இவர் 2014ஆம் ஆண்டு வெளியான ‘பிள்ளா நூவு லேனி ஜீவிதம்’ படத்தின் மூலம் அறிமுகமானார். சாய் தரம் தேஜ், ‘ரே’, ‘சுப்பிரமணியம் பார் சேல்’,’தேஜ் ஐ லவ் யூ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (செப்.10) மாலை சாய்தரம் தேஜ், தன்னுடைய விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஹைதராபாத்தில் உள்ள கேபிள் பாலத்தில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர் சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடிகர் சாய்தரம் தேஜ்-க்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய்தரம் தேஜின் வலது கண் மற்றும் மார்பில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹெல்மெட் இருந்தபோதிலும், சாய்தரம் தேஜ் விபத்தின் தீவிரம் காரணமாக பலத்த காயமடைந்ததாக தெரிகிறது.

108 ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் சாய் தரம் தேஜ், சிரஞ்சீவி குடும்பத்தினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பைக்கில் அதிவேகமாக சென்றதாக விபத்து ஏற்பட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.நடிகர் சாய்தரம் தேஜ் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சாய்தரம் தேஜின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் எந்த காயங்களும் இல்லையென்றும், தோள்பட்டை எலும்பில் மட்டும் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தேஜ் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்து நடிகர் பவன் கல்யாண், சிரஞ்சீவி உள்ளிட்ட உறவினர்கள் மற்றும் அல்லு அரவிந்த் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடல்நிலை பற்றி கேட்டறிந்தனர்.
























