இத்தாலி நாட்டில் ரோம் நகரில், இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய 16-வது ஜி-20 அமைப்பின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பை ஏற்று இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
கொரோனாவுக்கு பிறகான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பருவ நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில், இத்தாலி தலைமையின் கீழ் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, இன்று தொடங்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் உரையாற்ற இருக்கிறார். இதில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரதமர், பருவ நிலை தொடர்பான மாநாட்டில் பங்கேற்க கிளாஸ்கோ செல்கிறார். கிளாஸ்கோவில் நடைபெறும் 26-வது கட்சிகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாடு நவம்பர் மாதம் 1 மற்றும் 2 ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு இடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
























