இன்று விவசாயிகள் சங்கமான ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்)’ சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டேஹ்சில் மற்றும் மாவட்ட தலைநகரங்களில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி 11 மாதங்கள் நிறைவு பெறுவதை ஒட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி அஜய் மிஷ்ரா டேனி தொடர்புடையவர் என்ற கருத்தை வலியுறுத்தியும், அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தின் முடிவில் இந்திய ஜனாதிபதிக்கு மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக கடிதம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரான வெளிநாடு வாழ் இந்தியர் ‘தர்ஷன் சிங் தாலிவால்’, சிகாகோவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை . இதற்கு கடும் கண்டனத்தையும் கிசான் மோர்ச்சா சங்கத்தினர் தெரிவித்தனர்.
























