சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் 25 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள், என்ற விதத்தில், அதாவது ஒரு நாள் 12 பேரும் மற்றொரு நாள் 12 பேர் என்ற அடிப்படையில் பணிபுரியுமாறு மேலதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாதி சம்பளம் தான் கிடைக்கும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தினந்தோறும் பணிசெய்யும் நடைமுறைக்கே கொண்டு வரக்கோரி அம்மா உணவக ஊழியர்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்கு வாதம் செய்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மா உணவக ஊழியர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சுழற்சி முறை மாற்றமானது அனைத்து அம்மா உணவகங்ளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மாதம் 4,500 ரூபாய் சம்பளத்தில் ஒரு குடும்பத்தை எவ்வாறு நடத்த முடியும் என்றும், பாதி சம்பளத்தில் யார் வேலை செய்வார்கள், இது அம்மா உணவகத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்தில் தெரிவிக்கப்படுள்ளது என்ற சந்தேகம் எழுப்புவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
























