இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம், நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து நேபாள்கஞ்ச் பகுதிக்கு புறப்படுவதாக இருந்தது. பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு விமானம் வந்தபோது எதிர்பாராத விதமாக ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிக்கொண்டது.
விமானத்தின் இடதுபக்க டையர் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்தரையில் சிக்கிக்கொண்டது. இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த பயணிகள் சற்று பதற்றம் அடைந்தனர்.
விமானநிலைய ஊழியர்கள் உடனடியாக அங்கு விரைந்த பயணிகளை விமானத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புல்தரையில் சிக்கிய விமானம் மீட்பு வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டது. அதன்பின்னர் விமானம் மீண்டும் நேபாள்கஞ்ச் நகருக்கு புறப்பட்டு சென்றது.
























