நடக்கவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை திருப்பத்தூரைச் சேர்ந்த மலைக்கிராம மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுடன் காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் கொடி அணிவகுப்பு நடத்தியும் தங்களால் ஆன முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகில் மாதனுர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி மலைகிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த ஒரு பிரிவு மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆதிதிராவிட பெண் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பிறகு கடும் அதிருப்தியடைந்துள்ள கிராமத்தினர் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்பிரச்சினையில் திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சுப்புராஜீ மற்றும் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள், வரும் 9ஆம் தேதி தேர்தலில் ஊர் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கிராம முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு கிராம நிர்வாகிகள் வாக்களிக்க செல்பவர்களைத் தடுக்க மாட்டோம் என உறுதி அளித்தனர். அவர்களின் வாக்குறுதியை ஏற்று, மலை கிராமத்தில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
























