பெரு நாட்டின் லிமா நகரில் உலக துப்பாக்கி சுடுதல் அமைப்பு நடத்தும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 3ம் நாள் போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி உட்பட நான்கு தங்க பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதை தொடர்ந்து பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்கா 4 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று 2ம் இடம் வகிக்கிறது.
10 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி மற்றும் 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம் வென்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் மணு பாகெர், இன்று மேலும் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார். இதன்மூலம் அவர் மொத்தம் 3 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இவர் சரப்ஜோட் சிங்குடன் இணைந்து பிஸ்டல் கலப்பு அணி போட்டியில் தங்கம் வென்றார்.
ரிதம் சங்வான் மற்றும் ஷிகா நர்வாலுடன் இணைந்து பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில், 16-12 என்கிற கணக்கில் பெலாரஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றனர்.
நவீன், சரப்ஜோட் சிங் மற்றும் சிவா நர்வால் ஆகியோர் இணைந்த ஏர் பிஸ்டல் ஆண்கள் அணி, பெலாரஸ் நாட்டு ஆண்கள் அணியை 16-14 என்கிற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜூனியர் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் மற்றும் ஆண்கள் அணியினர் போட்டியின் முதல் ரவுண்டில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி தங்கம் வென்றனர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில், இந்தியாவின் நிஷா கன்வார், ஷீனா கிட்டா மற்றும் ஆத்மிகா குப்தா அணியினர் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றனர். எனினும், இரண்டாவது ரவுண்டில் ஹங்கேரி அணியினரிடம் தோல்வி அடைந்து 2ம் இடம் பிடித்தனர்.
ஆத்மிகா மற்றும் ராஜ்ப்ரீத் சிங் இணைந்து 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில், 2ம் இடம் பிடித்தனர். ராஜ்ப்ரீத் சிங் இந்த சாம்பியன்ஷிப்பில் 1 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























