வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று (27-09-2021) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருநெல்வேலி , கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை (28-09-2021) நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் (29-09-2021) கடலோர மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை ,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும்.
வருகிற 30-ஆம் தேதி வட உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
இன்று (27-09-2021) குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், (காற்றின் வேகம் 45-55) ஆந்திர கடலோரப் பகுதி (காற்றின் வேகம் 40-50) , கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























