அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படமும் பொங்கலன்று வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. பின் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தற்போது விஜய்யை வைத்து ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிற நிலையில் விஜய் – அஜித் ரசிகர்கள் போட்டிக்குத் தயாரானார்கள்.
இந்நிலையில், களத்தில் நாங்களும்தான் இருக்கிறோம் என்பது போல் சூர்யா ரசிகர்களுக்கு நற்செய்தியாக ஓர் தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ப்ரியங்கா மோகன் ஜோடியாக சூர்யா நடித்து வரும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக ஓர் தகவல் உலவுகிறது. முன்னணி நடிகர்களான விஜய் – அஜித் – சூர்யா படங்கள் ஒரே தினத்தில் வெளியாவது பிரம்மாண்டமாக இருக்கும். இருந்தும் பீஸ்ட் மற்றும் எதற்கும் துணிந்தவன் இரண்டு படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. ஆகவே, இரண்டும் ஒரே நாளில் போட்டியிட வாய்ப்பே இல்லை என்பதால் வலிமையுடன் பீஸ்ட் அல்லது எதற்கும் துணிந்தவன் ஆகியவற்றில் ஒரு படம் போட்டி போடுவது உறுதியாகியிருக்கிறது.
























